சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில், ‘ரங்கூன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது. இந்தநிலையில் சென்னைக்கு வந்திருந்த சிவகார்த்திகேயன் கூறியதாவது: டி.வியில் மிமிக்ரி செய்துவிட்டு சினிமாவுக்கு வந்த நான், காமெடியை மட்டுமே மலைபோல் நம்பியிருந்தேன். இப்போது படிப்படியாக நடிப்பில் முன்னேறி இந்நிலைக்கு வந்துள்ளேன். ரசிகர்களுக்குப் பிடித்த நல்ல எண்டர்டெயினராக இருக்கவே பெரிதும் விரும்புகிறேன்.
என்னிடம் இருந்து நல்ல நடிப்பை வெளிப்படுத்த இயக்குனர் களும் நினைக்க வேண்டும். அதுபோன்று எனக்கு ‘மாவீரன்’ பட இயக்குனர் மடோன் அஷ்வின் கிடைத்தார். அவர் விரும்பினால், மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற நான் தயார். நாங்கள் அவரது திறமையை மட்டுமே நம்பினோம். இப்படம் தோல்வி அடைந்து இருந்தால், எனக்கு படத்தில் இருந்து சம்பளம் கிடைத்திருக்காது. வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது மாறி, மாறி வரும். அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதே முக்கியம். ‘மாவீரன்’ படத்துக்காக முதலில் வாய்ஸ் கொடுக்க, இயக்குனரின் சாய்ஸ் விஜய் சேதுபதியாக இருந்தது. எனக்கு விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கிறது. எனக்கும், அவருக்கும் போட்டி கிடையாது. அவரது நடிப்பை நான் அதிகமாக ரசிப்பேன்.