சென்னை: ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படத்தை தொடர்ந்து கவுதம் ராஜ் இயக்கியுள்ள படம், ‘கழுவேத்தி மூர்க்கன்’. ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் தயாரித்துள்ளார். அருள்நிதி ஜோடியாக ‘சார்பட்டா பரம்பரை’ துஷாரா விஜயன் நடித்துள்ளார். மற்றும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஷ்காந்த், சரத் லோகித்தஸ்வா, ராஜசிம்மன், யார் கண்ணன் நடித்துள்ளனர். தர் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். வரும் 26ம் தேதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் இப்படத்தைப் பற்றி நிருபர்களிடம் கவுதம் ராஜ் கூறியதாவது: தற்போதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கழுவேத்தி மரங்கள் காணப்படுகின்றன. மக்கள் அதை தெய்வமாக நினைத்து வணங்குகின்றனர். சங்க இலக்கியங்கள் மற்றும் சரித்திரத்தில் கழுவேத்தி மரத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மரண தண்டனை வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தமிழ்நாட்டில் கழுவேற்றி கொன்றிருக்கின்றனர். மரண தண்டனைக்கு ஏன் அந்த மரத்தை தேர்வு செய்தனர் என்ற ரகசியத்தை தீவிரமாக ஆராய்ந்து, அத்துடன் இன்றைய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன். கிராமத்தில் விவசாயம் செய்யும் முரட்டு இளைஞன் மூர்க்கன் வேடத்தில் அருள்நிதி நடிக்க, கிராமத்துப் பெண்ணாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். அருள்நிதியின் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு அழுத்தமான முத்திரை பதிக்கும்.
227