தெலுங்கில் ஹிட்டாகி வசூலில் சாதனை படைத்த படம், அதே பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. ‘அருந்ததி’ பாணி மந்திர, தந்திரங்கள் நிறைந்த ஆக்ஷன் படம் இது. பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் அம்மை நோய் பரவுகிறது. அங்கு வசிக்கும் மருத்துவர் ஆன்மாக்களைக் கட்டுப்படுத்தி, சாவின் விளிம்பில் இருந்து மக்களைக் காப்பாற்றலாம் என்ற வேத விதிமுறைகளை உருவாக்குகிறார். இதற்காக அனாதைப் பிணங்களை வைத்து ஆராய்ச்சி செய்கிறார். அவர்தான் நோய் பரப்பிச் சாகடித்து, அப்பிணத்தை வைத்து செய்வினை செய்கிறார் என்று நினைக்கும் ஊர் மக்கள், கோபத்தில் திரண்டு வந்து மருத்துவரையும், அவரது மனைவியையும் மரத்தில் கட்டி வைத்து எரிக்கின்றனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊரில் மர்மமான முறையில் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். தீயசக்தி ஊருக்குள் புகுந்துள்ளதாகச் சொல்லி அம்மன் கோயில் மூடப்பட்டு, ஊர் எல்லைகளும் அடைக்கப்படுகிறது. பரம்பரைச்சொத்தில் இருந்து பள்ளி கட்டுவதற்காக நிதி கொடுக்க ஊருக்கு வரும் ஹீரோ சாய் தரம் தேஜ், பல்வேறு உண்மைகளைக் கண்டுபிடித்து, ஊர் மக்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது கதை. நம்ப முடியாத கற்பனைக்கதை என்றாலும், பிரமாண்டமான காட்சி அனுபவத்தில் கொடுத்து, இரண்டரை மணி நேர எண்டர்டெயின்மெண்டுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளார், இயக்குனர் கார்த்திக் வர்மா தண்டு.
படத்தின் திரைக்கதையை ‘புஷ்பா’ இயக்குனர் சுகுமார் எழுதியுள்ளார். நேர்த்தியான தமிழ்மொழி மாற்றமும், சில காட்சிகளின் மாற்றமும் நேரடி தமிழ்ப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. சாய் தரம் தேஜ் ஒரு சாயலில் இளமைக்கால சிரஞ்சீவி மாதிரி இருக்கிறார். கதையின் நாயகி சம்யுக்தா மேனன் முதலில் அழகின் வடிவமாக வந்து, பின்பு ஆக்ேராஷ சக்தியாக மாறி அப்ளாஸ் அள்ளுகிறார். அப்பா, மகள் சென்டிமென்ட், அழகான கிராமத்துக் காதல், அதிரடி திருப்பங்கள், யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் என்று, செம மாஸ் படமாக வழங்கியுள்ளனர்.