மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இப்படம் இந்தி தவிர தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வந்தது. திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் ஒரு பெண்ணின் கதையாக உருவாகியிருந்த இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றியது குறித்து அனுஷ்கா கூறுகையில், ‘நான் ’பாகுபலி’ படத்துக்குப் பிறகு ‘பாகமதி’ படத்தில் நடிக்க வேண்டியிருந்தது.
முன்பே அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்ததால் நடித்தேன். அதற்குப் பிறகு எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. எதிர்காலப் படங்களுக்கு என்னை நன்கு தயார் செய்வதற்கு அந்த இடைவெளி அவசியமானது என்று உணர்ந்தேன். ஓய்வெடுத்து எனக்குப் பழக்கம் இல்லை என்றாலும், ஏனோ எனக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. அந்த நேரத்தில் நான் எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது நிறைய கதைகள் கேட்டு வருகிறேன். நல்ல கதைகள் அமைந்தால், எந்த மொழியாக இருந்தாலும் நடிப்பேன். தெளிந்த சிந்தனையுடன் எனது புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறேன். இனி நடப்பது யாவும் நல்லதாகவே நடக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.