திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள பெரிய ரத வீதியில் சரவணப்பொய்கை அருகே, வெள்ளியங்கிணற்று சந்தில், ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இறந்தவர் சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சேர்ந்த சின்னு மகன் மோகன் (53) எனவும், கமலஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் மற்றும் நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோகன் எப்படி இங்கு வந்தார், எவ்வாறு இறந்தார் என விசாரித்து வருகின்றனர். மேலும், உடலை பெற்று செல்ல அவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.