சென்னை: தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் கலந்துகொள்ள வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் வேண்டுகோள் விடுத்தார். நிருபர்களிடம் விஷால் கூறியதாவது: வாக்களிக்கும் மக்கள் அனைவருமே அரசியல்வாதிகள்தான். சமூக அக்கறையுடன் செயல்படும் எல்லோரும் அரசியல்வாதிகள்தான். அந்த வகையில் நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன். மக்களுக்கு சேவை செய்வதுதான் அரசியல்வாதிகளின் பணி.
அரசியல் என்பது பிசினஸ் கிடையாது. நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. மக்களுக்கு மேலும் நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக. அப்படித்தான் நான் என்னை கருதுகிறேன். நயன்தாரா மாதிரி ஒரு சில நடிகைகள் தாங்கள் நடிக்கும் புரமோஷன்களில் கலந்து கொள்ளாதது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பது அவர்கள் கடமை. அது தயாரிப்பாளர்களுக்கு செய்யும் உதவி. இவ்வாறு விஷால் கூறினார்.