திருவனந்தபுரம்: மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவர், விநாயகன். கடந்த 1995ல் ‘மாந்திரீகம்’ என்ற படத்தில் அறிமுகமானார். பிறகு ‘சிந்தாமணி கொல கேஸ்’, ‘சோட்டா மும்பை’, ‘பிக் பி’, ‘கம்மட்டிபாடம்’ உள்பட பல படங்களில் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ‘கம்மட்டிபாடம்’ படத்தில் நடித்ததற்காக, கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். தமிழில் ‘திமிரு’, ‘சிலம்பாட்டம்’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘சிறுத்தை’ ஆகிய படங்களில் நடித்துள்ள விநாயகன், இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், பஞ்சாப்பில் ஒரு பள்ளியில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த ஜிபி ஜேம்ஸ் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் அவர், ‘நான் கடந்த மே மாதம் 27ம் தேதி கோவாவில் இருந்து கொச்சிக்கு ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தேன். அந்த விமானத்தில் நடிகர் விநாயகனும் பயணம் செய்தார். விமான பயணத்தின்போது என்னிடம் அவர் ஆபாசமாக நடக்க முயற்சித்தார். விமானத்தில் இருந்து இறங்கிய பின்பு, இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான கம்பெனியிடம் புகார் செய்தேன். ஆனால், விமானத்தில் இருந்து இறங்கிய பிறகு தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவர்கள் சொல்லிவிட்டனர். எனவே, சிவில் விமான போக்குவரத்து துறையிடம் புகார் செய்தேன். அவர்களும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தனியார் விமான நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
விநாயகன் மீது கடந்த 2019ல் ஏற்கனவே ஒரு இளம்பெண் புகார் கொடுத்திருந்தார். ஒரு நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்வதற்காக அழைத்தபோது, போனில் தன்னிடம் விநாயகன் ஆபாசமாகப் பேசியதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு விநாயகனுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.