திருவண்ணாமலை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் திருவண்ணாமலை, செஞ்சி ஆகிய பகுதி களில் நடந்து வருகிறது. அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதையொட்டி கடந்த 25ம் தேதி திருவண்ணாமலை வந்த ரஜினிகாந்த், தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். பிறகு ஊசாம்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள பண்ணை வீட்டில் நடந்த ஷூட்டிங்கில் நடித்த அவரது காட்சிகள் முடிந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கோயில் உள்னே சென்ற அவர், சாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார். அவருக்கு சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர். ரஜினிகாந்த் கோயிலுக்கு வந்த தகவல் பரவியவுடன் அவரது ரசிகர்கள் திரண்டு வந்தனர். அவருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரஜினிகாந்துடன் வந்தவர்கள் அவரைப் பாதுகாப்புடன் கோயிலில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அண்ணாமலையார் மீது தீவிர பக்தி கொண்ட ரஜினிகாந்த், 25 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.