திருவனந்தபுரம்: மலையாள படங்கள் 100 கோடியை தாண்டி வசூலிப்பது சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. முதல் படமாக ‘த்ரிஷ்யம்’ 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அதை தொடர்ந்து புலிமுருகன், லூசிபர், த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட சில படங்கள் 100 கோடியை தாண்டி வசூலித்தது. தற்போது இந்த சாதனைகளை முறியடித்துள்ளது சமீபத்தில் வெளியான ‘2018’ என்ற படம். உலகம் முழுக்க 200 கோடி வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த முதல் படமாக மாறி இருக்கிறது 2018.
இந்த படம் 2018ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெரும் மழை வெள்ள இயற்கை பேரழிவை பின்னணியாக கொண்டு உருவானது. நிஜமான மழை வெள்ள பாதிப்பை படம் எடுத்து, அதற்கேற்ப ஒரு திரைக்கதை அமைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார் ஜூட் ஆன்டனி ஜோசப். இவர் ஏற்கெனவே ஓம் சாந்தி ஓசனா, ஒரு முத்தச்சி கதா, சாராஸ் படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களும் வரவேற்பை பெற்றன.
2018 படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் னிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் தமிழ், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இரு மொழிகளிலும் போதிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம் தற்போது ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தியேட்டர்களிலும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.