சென்னை: ரீல்ஸ், ஷாட்ஸ் போன்ற தங்களது சுய விளம்பரத்திற்காக பலர் விபரீதமான முயற்சிகளில் ஈடுபட்டுவது வழக்கமாகி வருகிறது. இதில் வாகனத்தில் பயணித்துக்கொண்டே, செல்பி, மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுப்பது அதிகரித்துள்ளது. ஆபத்தை பற்றி யோசிக்காமல், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் பல இடங்களில் விபத்துகள் நடக்கின்றன.இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போக்குவரத்து காவல்துறை பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால் சினிமா பிரபலங்கள் கூட இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அவலம் நடக்கிறது. இப்போது அதுபோன்ற ஒரு செயலில்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஈடுபட்டிருக்கிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
காரில் செல்லும்போது சூரிய ஒளி காருக்குள் வர வேண்டும் என்பதற்காக சன் ரூப்பை திறந்துவிடுவார்கள். ஆனால் இந்த சன் ரூப்பில் தலையை நீட்ட கூடாது என்பது போக்குவரத்து விதியாகும். ரச்சிதா வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் கார் ஓட்ட, அந்த காரில் அவரது தோழி சிவின் காரின் சன் ரூப்பில் தலையை நீட்டியபடி செல்பி வீடியோ எடுக்க, காரை ஓட்டியபடி ரச்சிதாவும் சிரித்தபடியும் பாட்டுப் பாடியும் போஸ்கள் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ரச்சிதா மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.