மும்பை: இந்தியில் பிளாக்பஸ்டர் படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றிய நிதின் சந்திரகாந்த் தேசாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திரைக்கு வந்த ‘தேவ தாஸ்’, ‘ஜோதா அக்பர்’, ‘லகான்’ உள்பட ஏராளமான பிளாக்பஸ்டர் படங்களுக்கு ஆடம்பரமான அரங்குகளை வடிவமைத்து புகழ்பெற்ற கலை இயக்குனர், நிதின் சந்திரகாந்த் தேசாய் (57). சிறந்த கலை இயக்கத்துக்கான தேசிய திரைப்பட விருதை 4 முறை பெற்றுள்ள அவர், மும்பை கர்ஜத் பகுதியில் அமைந்திருக்கும் தனது என்.டி ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வரும் 9ம் தேதி அவர் தனது 58வது பிறந்தநாள் விழாவை கொண்டாட இருந்த நிலையில், திடீரென்று இப்படியொரு விபரீத முடிவை எடுத்துள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
நிதின் சந்திரகாந்த் தேசாயின் அகால மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். அலுவலகத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்த நிதின் சந்திரகாந்த் தேசாய் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து தீவிரமான விசாரணை மேற்கொண்டுள்ளனர். நிதின் சந்திரகாந்த் தேசாயின் திடீர் தற்கொலை முடிவுக்கு நிதி நெருக்கடி காரணம் என்று, கர்ஜத் பகுதியின் எம்எல்ஏ மகேஷ் பல்டி கூறியுள்ளார். 4 தேசிய விருதுகளை வென்ற ஒரு திரைப்பட கலைஞர், நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துள்ளசம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏராளமான இந்தி, மராத்தி படங்கள் மற்றும் வரலாற்று டி.வி தொடர்களில் கலை இயக்குனராகப் பணியாற்றிய நிதின் சந்திரகாந்த் தேசாய், ஜே.ஜே கலைப்பள்ளியில் தனது கலைப்பயிற்சியை முடித்தார். 1987 முதல் திரைப்படங்களுக்கு கலை இயக்கம் மேற்கொள்ளத் தொடங்கினார். 2005ல் கர்ஜத்தில் தனது என்.டி ஸ்டுடியோவை நிறுவினார். தற்போது அதே ஸ்டுடியோவில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு என்.டி ஸ்டுடியோ வில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு, செட்டுகள் அனைத்தும் பலத்த சேதம் அடைந்ததால் அவர் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி, வாங்கிய கடனைக்கூட உடனே அடைக்க முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். நிதி நிறுவனங்களிடம் ரூ.252 கோடி கடன் வாங்கி, அதை அவரால் அடைக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நிதின் சந்திர காந்த் தேசாயின் நிறுவனத்துக்கு எதிராக திவால் நடவடிக்கை மேற்கொள்வதற்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந் தது. இந்த சூழ்நிலையில் நிதின் சந்திரகாந்த் தேசாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.