கோயம்புத்தூரில் உள்ள துப்பறியும் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறார் நவீன் ஒரு துப்பறிவாளர். தேனி முருகன், தன்னுடைய மகள் அஞ்சனா பாபு கல்லூரி நூலகத்தில் உள்ள நபரை காதலிப்பதால் அவரை பற்றி விசாரித்து தரும்படி நவீனிடம் கேட்கிறார். இந்நிலையில் நவீனின் கார் மோதி, அஞ்சனா பாபு காதலித்த நபர் இறக்கிறார். அந்த உடலை யாருக்கும் தெரியாமல் நவீன் புதைக்கிறார். இதற்கிடையே நவீனை ஒருவர் பிளாக்மெயில் செய்ய ஆரம்பிக்கிறார். அஞ்சனாவின் காதலரிடம் இருந்த மெமரி கார்டு நவீனுக்கு கிடைக்கிறது. இதில் இருந்த ரகசியம் என்ன, நவீனின் கதி என்ன என்பதே படம். படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நவீன் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விசாரிக்கும் விதம், விபத்து ஏற்பட்டவுடன் வருந்துவது என நடிப்பில் தேறுகிறார். இவரே கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார். படம் ஆரம்பத்திலேயே திரைக்கதை வேகம் எடுக்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை உருவாக்கி இருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் வழக்கமான சினிமாத்தனமாக படத்தை இயக்கி இருக்கிறார்.
நாயகியாக வரும் அஞ்சனா பாபு யதார்த்தமாக நடித்து இருக்கிறார். மற்றொரு நாயகி கோபிகா சுரேஷ் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தேனி முருகன். கிரைம் திரில்லர் படத்திற்கு தேவையான பின்னணி இசையை கொடுக்க முயன்றுள்ளார் இசையமைப்பாளர் ஜாக் வாரியர். பிரபு கண்ணனின் ஒளிப்பதிவு, அஜு வில்பரின் படத்தொகுப்பு ஓகே ரகம்.