டெல்லி: பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் டைரக்ஷனில் திரைக்கு வந்துள்ள ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தில், பாலுறவு காட்சியின்போது பகவத் கீதை வரி இடம்பெற்றுள்ளது சர்ச்சைக்குள்ளான நிலையில், அக்காட்சிகளை நீக்க சென்சார் போர்டுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவுறுத்தியுள்ளார். ‘அணுகுண்டின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம், ‘ஓப்பன்ஹெய்மர்’. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இப்படம், கடந்த 21ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. ‘உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்’ என்று வரும் பகவத் கீதை வரி, இப்படத்தின் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது.
படத்தின் ஹீரோவும், ஹீரோயினும் நெருக்கமாக இருக்கும் ஒரு காட்சியில் இந்த வரி இடம்பெறுகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் வெட்டப்பட்டு, இந்தியாவில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்சொன்ன காட்சியை கத்தரிக்காமல் விட்டது ஏன் என்று சென்சார் போர்டு உறுப்பினர்களை பலர் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட அக்காட்சிகளை உடனே நீக்க வேண்டும் என்று, சென்சார் போர்டுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் உத்தரவிட்டுள்ளதாகவும், இக்காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.