சென்னை: சமீபத்தில் ஒரு விழாவில் இயக்குனர் சுதா கொங்கரா உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது: இயக்குனர் ஆவதற்கு முன்பு, மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குனராக இருந்தேன். என்னுடைய முதல் படமான துரோகி படத்தை எடுத்துக் கொண்டிருந்தபோது, மிகவும் டார்ச்சரான சூழ்நிலையில் இருந்தேன். அப்போது மணி சாருக்கு மொபைல் போனில் ஒரு மெசேஜ் அனுப்பினேன். அதில் நான் இந்த படத்தை விட்டு நான் செல்ல போகிறேன், என்னால் இந்த டார்ச்சரை தாங்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தேன். அப்போது மணிரத்னம் சார் ராவணன் படப்பிடிப்பிற்காக காட்டில் இருந்தார். எப்போதுமே மணிரத்னம் சாருக்கு மெசேஜ் அனுப்பினால் கொஞ்சம் தாமதமாக ரிப்ளை வரும். ஆனால் நான் அனுப்பிய அந்த மெசேஜுக்கு உடனடியாக அவர் நான்கு பக்கத்திற்கு மெசேஜ் அனுப்பினார்.
அதில் என்னவாக இருந்தாலும் சரி அந்த படத்தை நீ முடித்துவிட்டு தான் வர வேண்டும் என்று சொல்லியிருந்தார். அந்த படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. அதன் பின்னரும் மணி சாரிடம் சென்று அழுது நான் இந்த திரைத்துறையை விட்டு சென்று விடுகிறேன் என்று கூறினேன். உடனே அவர் என்னை பார்த்து நீ உட்கார்ந்து கொண்டிருப்பது மூன்று படங்கள் தோல்வி அடைந்து பின்னர் மீண்டு வந்த இயக்குனர் என்பதை நினைவில் கொள். எந்த தைரியத்தில் என்னிடம் நீ இப்படி பேசுகிறாய் என்று கேட்டார். அடுத்ததாக இறுதிச்சுற்று படத்தை நான் எடுக்கும் பொழுது எல்லோருமே இதை எடுக்கவே முடியாது என்று சொன்னார்கள் அப்போதும் நான் மணி சாரிடம் சென்ற போது, அவர் உன்னுடைய வேலையின் மூலமாக அதை நிகழ்த்தி காட்டு என்று சொன்னார். இவ்வாறு சுதா கொங்கரா கூறினார்.