சென்னை: நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு ரஜினிகாந்த் நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சரத்பாபு நல்ல நண்பர். அவர் என்னுடன் சேர்ந்து நடித்த படங்கள் எல்லாமே மிக முக்கியமானது. முத்து, அண்ணாமலை எல்லாம் மிக முக்கியமான படங்கள். என் மீது அவருக்கு அளவு கடந்த அன்பு மரியாதை இருந்தது. நான் சிகரெட் பிடிப்பதை பார்த்து மிகவும் வருத்தப்படுவார். சிகரெட் பற்ற வைத்து வாயில் வைக்க போகும்போது அதை பறித்து வீசிவிடுவார். அந்த அளவுக்கு எங்களது நட்பு இருந்தது. ‘சிகரெட்டை பிடித்து உடலை கெடுத்து கொள்ள வேண்டாம், ரொம்ப நாள் வாழ வேண்டும்’ என்று சொல்லுவார். அவர் முன்னால் நான் எப்போதும் சிகரெட் பிடிப்பதில்லை. ‘அண்ணாமலை’யில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு பெரிய டயலாக்கை பேசுவதற்குள் பத்து பதினைந்து டேக் சென்று கொண்டிருந்தது. அப்போது நான் சரியாக செய்யும் வரை பொறுமையாக காத்திருந்தார். நான் நீண்ட காலம் வாழ வேண்டும் என நினைத்தவர், இப்போது இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
260