37
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். வரும் 19ம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. இது குறித்து அவர் அளித்த பேட்டி: தமிழில் சர்கார் படத்திற்கு பிறகு நான் நடித்துள்ள தமிழ் படம் இது. 2 வருட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கிறேன். மகாநதி படத்திற்கு பிறகும் தேசிய விருதுக்கு பிறகும் பொறுப்பு கூடிவிட்டதால் கதை தேர்வில் கவனமாக இருக்கிறேன். 20 கதைகள் வரை கேட்டு நிராகரித்த பிறகு பெண்குயின் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டேன். கொரோனா ஊரடங்கால் எனது 6 படங்கள் வெளிவர முடியாமலும், படப்பிடிப்பை முடிக்க முடியாமலும் இருக்கிறது. எனது பள்ளி பருவத்திற்கு பிறகு இப்போதுதான் 40 நாளுக்கு மேல் வீட்டில் இருக்கிறேன். இந்த ஊரடங்கு காலத்தில் வயலின் கோர்சை கற்று முடித்தேன். புதிதாக யோகா கற்றுக் கொண்டேன். என்னால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்தேன்.
பெண்குயின் படம் ரிலீசாகிறது. என்னதான் இருந்தாலும் தியேட்டரில் பார்க்கும் அனுபவம், ஓடிடி தளத்தில் இருக்காது. ஆனாலும் இன்றைய சூழ்நிலைக்கேற்ப நாம் மாறிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. உலகம் முழுவதும் படம் ஒரே நேரத்தில் போய் சேருவது, எப்போது வேண்டுமானாலும் படத்தை பார்க்கலாம் என்பது மாதிரியான சில வசதிகளும் ஓடிடி தளத்தில் இருப்பதை மறுக்க முடியாது. சினிமா பெரிய பொருளாதார சிக்கலை சந்திக்கும். இதனால் சினிமா தொடர்புடைய அனைவருமே தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டியது இருக்கும். நான் 20 முதல் 30 சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். அடுத்து நான் ஒப்பந்தமாக இருக்கும் படத்தில் இருந்து இதை தொடங்குகிறேன் என்றார்.