தாயை இழந்த மகள் வெண்பாவை, தாயுமானவனாக இருந்து வளர்த்து வருகிறார் ஆடுகளம் நரேன். தன் மகள் படித்து டாக்டராக வேண்டும் என்பது அவரது கனவு. அப்பாவின் கனவை நனவாக்க வேண்டும் என்பது வெண்பாவின் லட்சியம். இதற்காக படிப்பில் மட்டுமே தீவிர கவனம் செலுத்துகிறார். இடையில் தன் தோழி மூலம் அறிமுகமாகும் இன்ஸ்பெக்டரின் மகன், வெண்பாவிடம் காதலை சொல்ல, அவனை கடுமையாக திட்டி அனுப்புகிறார். இதனால் ஆத்திரம் அடையும் அவன், வெண்பா மீது ஆசிட் வீசுகிறான். அதிலிருந்து அவரை ஆட்டோ டிரைவர் அபி சரவணன் காப்பாற்றுகிறார்.அந்த நன்றி உணர்ச்சியே காதலாகி, வெண்பா கடைப்பிடித்த கட்டுப்பாடுகள் தளர்ந்து விடுகிறது. பள்ளிப் படிப்பு முடியும் முன்பே, காதலை மீற முடியாமல் திருமணம் செய்துகொள்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ். பதின்மவயதில் வரும் பாலின கவர்ச்சியை காதல் என்று கருதும் சில மாணவர்களின் லட்சியமும், வாழ்க்கையும் எப்படி பாழாகிறது என்பதை, உண்மைக்கு நெருக்கமாக இருந்து படமாக்கியுள்ளார் இயக்குனர் அசோக் தியாகராஜன்.நரேனுக்கும், வெண்பாவுக்கும் இடையிலான அப்பா, மகள் பாசம் வழக்கமானது என்றாலும், தன் மகளுக்கு கதைகளின் மூலம் வாழ்க்கையை புரிய வைப்பது அழகான கவிதை. கட்டுப்பாடற்ற சுதந்திரம் தந்து, பிள்ளைகளை ஒழுங்கீனமாக வளர்க்கும் பெற்றோர்களையும் சுட்டிக்காட்டுகிறது படம். அன்பான அப்பா கேரக்டரை நரேன் சுலபமாக செய்துவிட்டு செல்கிறார். கவுசல்யா கேரக்டரில் நன்கு பொருந்தும் வெண்பா, நடிப்பிலும் குறை வைக்கவில்லை. தந்தையின் கனவுகளை சிதைத்ததை நினைத்து வருந்தும் காட்சிகளில் கலங்க வைக்கிறார். கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சீரியசாக இருக்கிறது அபி சரவணனின் கேரக்டர். கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளார். அவரது நண்பராக வரும் அப்புக்குட்டி, யதார்த்தமாக நடித்துள்ளார். ராஜா பவதாரிணியின் இசையில் இளையராஜாவின் சாயல். ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு, மாயவரத்தை சுற்றிக்காட்டுகிறது. போல்டான, நேர்மையான அபி சரவணன், வெண்பாவை வற்புறுத்தி திருமணம் செய்வதும், பிறகு அவர் எடுக்கும் முடிவும் பொருந்தவில்லை. நறுக்கென்று சொல்ல வேண்டிய கிளைமாக்சை நீட்டி முழக்கியுள்ளனர். முற்பகுதியில் கத்திரி போட வேண்டிய காட்சிகள் நிறைய இருக்கிறது. எனினும், மாயநதி தெளிவான பாதையில் பயணித்துள்ளது.
40