இந்தியை தவிர்த்து தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்தவர், மலையாள நடிகை பாவனா. கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதல் திருமணம் செய்து பெங்களூருவில் செட்டிலான அவர், தற்போது கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள படம், அவரது 86வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ‘தி டோர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பாவனா அண்ணன் ஜெய்தேவ் இயக்கியுள்ளார். ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் பாவனா கணவர் நவீன் ராஜன் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. தமிழில் கடைசியாக சரண் இயக்கத்தில் அஜித் குமார் ஜோடியாக ‘அசல்’ என்ற படத்தில் பாவனா நடித்திருந்தார். தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் தமிழுக்கு வருகிறார். படம் குறித்து ஜெய்தேவ் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது. விரைவில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’ என்றார். தமிழில் இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் கலையரசன், அனஸ்வரா குமார் நடித்த ‘பட்டினப்பாக்கம்’ என்ற படம் திரைக்கு வந்திருந்தது.