மும்பை: தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக ‘முகமூடி’ என்ற படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவுக்கு தொடர்ந்து இங்கு புதுப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சோர்வடைந்துவிட்ட அவர், மற்ற மொழிப் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து, பல ஹிட் படங்களை தந்தார். இதையடுத்து அவருக்கு தெலுங்கு, இந்தியில் மார்க்கெட் உச்சநிலைக்குச் சென்றது. பல கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்து பெற்ற அவர், மீண்டும் தமிழுக்கு வந்து, விஜய் ஜோடியாக ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்தார்.
இந்நிலையில், பூஜா ஹெக்டே நடித்த சில படங்கள் படுதோல்வியைச் சந்தித்தன. எனவே, நடிப்புக்கு தற்காலிக இடைவெளி விட்டிருந்த அவர், தற்போது ஆக்ஷன் திரில்லர் கதை கொண்ட ‘தேவா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஹீரோவாக ஷாகித் கபூர் நடித்துள்ளார். ‘சல்யூட்’, ‘காயம்குளம் கொச்சுன்னி’ ஆகிய மலையாளப் படங்களை இயக்கி இருந்த ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார்.
சித்தார்த் ராய் கபூரின் ராய் கபூர் பிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தது. வரும் அக்டோபர் 11ம் தேதி படம் திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்தது. தற்போது பூஜா ஹெக்டே தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இது, சூர்யா நடிக்கும் 44வது படமாகும். கார்த்திக் சுப்பராஜ் இயக்கு கிறார். அந்தமானில் முதற்கட்ட ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது.