சென்னை: அறிவு என்கிற அறிவரசு கலைநேசன் மக்களிசைக் கலைஞராக, பாடலாசிரியராக, பாடகராக, நடிகராக வலம் வருகிறார். அவரது ‘வள்ளியம்மா பேராண்டி’ என்ற தனி ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் பேசுகையில், ‘அறிவு எழுதிய பாடல்களுக்குள் அரசியல் தன்மை ஒளிந்திருக்கிறது. அவரிடம் இருந்த அம்பேத்கரிய பார்வைதான், அவருடன் எனக்கான நெருக்கத்தை அதிகரித்தது. அறிவு பாடும் பாடல்களில் இருக்கும் அரசியல் தன்மை, தற்போது மக்களிடம் சேர ஆரம்பித்துள்ளது.
அவர் எழுதிய ‘எஞ்சாமி’ பாட்டு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, பாடலிலுள்ள வரிகள்தான் காரணம். அப்போது அவருக்கு ஏற்பட்ட பிரச்னையில் இருந்து மீள்வதற்கான வெளிப்பாடாகவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்’ என்றார்.
அறிவு கூறுகையில், ‘இந்த ஆல்பத்தை உருவாக்க 2 வருடங்களானது. 12 பாடல்களும் வித்தியாசமாக இருக்கும். என் நோக்கத்தை இந்த ஆல்பம் பார்வையாளர்களுக்கு கடத்தும் என்று நம்புகிறேன். எங்கள் ஊர் திருவிழாவில் மக்களிசைக் கலைஞர்கள் பாடுவார்கள். அதைப் பார்த்தும், கேட்டும் வளர்ந்ததுதான், நான் தனியிசைக் கலைஞனாக மாற முக்கிய காரணமாகும். எவ்வளவு எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் கலங்க மாட்டேன். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு என் பணியை தொடர்வேன்’ என்றார்.