‘பொன்னியின் செல்வன்’ முதல் மற்றும் 2ம் பாகத்தில் பூங்குழலியாக நடித்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றவர் ஐஸ்வர்யா லட்சுமி. ‘கட்டா குஸ்தி’ படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருந்தார். மீண்டும் அதுபோன்ற ஆவேசமான கேரக்டரில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கும் அவர் கூறுகையில், ‘உலக வாழ்க்கையில் ஆண், பெண் ஆகிய இருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சமநிலை கொண்ட ஆண் மற்றும் பெண் கதாபாத்திரத்தை உள்ளடக்கியதே நல்ல சினிமா என்று நினைக்கிறேன்.
அப்படி இல்லாவிட்டால் அதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. காரணம், சினிமா என்பது நம்முடைய வாழ்க்கையையும், சமூகத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். வெள்ளித்திரையிலும், நம் வாழ்க்கையிலும் சமநிலை அடைய வேண்டும்’ என்றார். இவ்வாறு சொன்ன ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ‘அர்ச்சனா 31 நாட் அவுட்’, ‘குமாரி’, ‘அம்மு’ போன்ற மலையாளப் படங்கள் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படங்களாகும். மேலும், சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ என்ற ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தை இணைந்து தயாரித்து, ஒரு கேரக்டரிலும் அவர் நடித்திருந்தார்.