சென்னை: ஜூலியன் அன்ட் ஜெரோமா இண்டர்நேஷனல் சார்பில் ஜோமோன் பிலிப், ஜீனா ஜோமோன் தயாரித்துள்ள படம், ‘அங்காரகன்’. திரைக்கதை எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராகப் பணியாற்றி ஸ்ரீபதி ஹீரோவாக நடித்துள்ளார். டெரர் போலீஸ் அதிகாரியாக, மீண்டும் வில்லனாக சத்யராஜ் நடித்துள்ளார். மற்றும் மலையாள நடிகை நியா, ‘அங்காடித்தெரு’ மகேஷ் நடித்துள்ளனர். ராம்கோபால் வர்மா உதவியாளர் மோகன் டச்சு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். வரும் செப்டம்பர் 8ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:
இப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீபதி என்னிடம் கதை சொல்வதற்கு முன்பு, ‘இப்படத்தில் நான் ஹீரோ. நீங்கள் வில்லன். சம்மதமா?’ என்று கேட்டார். இதற்கு முன்பு ‘பாகுபலி’ படத்துக்காக டைரக்டர் ராஜமவுலி என்னிடம் இதுபோல் கேட்டார். ‘அங்காரகன்’ படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனது கேரக்டரில் வித்தியாசமான நடிப்பையும், மேனரிசங்களையும் வெளிப்படுத்த நல்ல ஸ்கோப் இருந்தது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படத்தில் நடிக்க சம்மதித்தபோது தயக்கம் இருந்தது என்றாலும், துணிச்சலுடன் ஒப்புக்கொண்டு நடித்தேன். அப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
எனவே, நான் பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை. ‘வால்டர் வெற்றிவேல்’, ‘அமைதிப்படை’ ஆகிய படங்களின் காலத்தில் சினிமா என் கையில் இருந்தது. இப்போது நான் சினிமாவின் கையில் இருக்கிறேன். அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறேன். என் கையில் 20 படங்கள் இருக்கின்றன. வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்பு வரும்போது, ‘எனக்கு தமிழும், அரைகுறை ஆங்கிலமும் மட்டுமே தெரியும்’ என்ற ரகசியத்தை சொல்லிவிடுவேன்.