சென்னை: பிபிஎஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.உகேஷ்வரன் தயாரித்துள்ள படம், ‘அக்காலி’. இதில் ஸ்வயம்சித்தா தாஸ், ஜெயக்குமார், வினோத் கிஷன், நாசர், தலைவாசல் விஜய், வினோதினி, தாரணி ரெட்டி, அர்ஜெய் நடித்துள்ளனர். கிரி மர்பி ஒளிப்பதிவு செய்ய, அனிஷ் மோகன் இசை அமைத்துள்ளார். முகமது ஆசிப் ஹமீத் எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது: ‘அக்காலி’ என்பது, பஞ்சாப்பில் சில பகுதிகளில் பேசப்படும் வழக்குமொழி. இறப்பில்லாத மனிதன் என்று அர்த்தம். இக்கதையில் அப்படி ஒருவர் இருப்பதாக சிலர் நம்புகின்றனர்.
அதனால் இந்த தலைப்பை நான் சூட்டினேன். இதுபற்றி கதையில் விளக்கம் வரும். இது ஒரு திரில்லர் படம். பில்லி சூனியத்தை நம்பும் ஒரு கும்பலை கண்டுபிடிக்கும் கதையுடன் உருவாகியுள்ளது. சென்னையிலுள்ள பொழிச்சலூர் காட்டுப்பகுதியில் பாழடைந்த பங்களா செட் அமைத்து படமாக்கினோம். இந்த அரங்கை தோட்டா தரணி மிகவும் வித்தியாசமாக அமைத்துள்ளார். அங்கு 2 வாரங்கள் கிளைமாக்ஸ் படமானது. ஸ்வயம்சித்தா தாஸ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவர் கையாளும் ஒரு வழக்குதான் படத்தின் கதையாகும். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.