சென்னை: மலையாள சினிமாவில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் லேனா. இவர் தமிழில் தனுஷின் அனேகன் மற்றும் திரவுபதி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். 47 வயதாகும் லேனா தனியே வசித்து வருகிறார். அடிக்கடி தத்துவம் பேசுவது இவரது இயல்பு. கடந்த சில வருடமாக இவர் ஆன்மிகம் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளார். திடீரென கடந்த 2018ல் மொட்டை அடித்துக்கொண்ட இவர், சாமியார் ஆகப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் மொட்டை போட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘முற்பிறவியில் திபெத் அருகே உள்ள பகுதியில் ஒரு புத்த துறவியாக நான் இருந்துள்ளேன். இது எனக்கு தெளிவாக தெரிய ஆரம்பித்துள்ளது. அதனால்தான் நான் சாமியார் ஆகப்போவதாக சொன்னேன். இப்போதும் நான் பவுத்த மதத்தை ஏற்கிறேன். அதில் ஈடுபாடு காட்டுகிறேன். அதில் எனக்கு மன அமைதி கிடைக்கிறது. நடிகர் மோகன்லாலுடன் எனக்கு ஆன்மிகத் தொடர்பு இருந்து வருகிறது. அவரை நான் எனது மானசீக குருவாக மதிக்கிறேன்’ என்றார். புதுப்பட வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்க லேனா மறுத்து வருகிறாராம்.