சென்னை: சிரஞ்சீவியின் சகோதரி மகன், சாய் தரம் தேஜ். தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர், தப்போது ‘விரூபாக்ஷா’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் சென்னையில் பிறந்து வளர்ந்து படித்ததால், தமிழில் சரளமாகப் பேசுவேன். தெலுங்கில் நடிக்க ஆரம்பித்து 10 வருடங்களாகி விட்டது. ‘விரூபாக்ஷா’ படம் ஹீரோயின் சம்யுக்தாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், ஒரு நல்ல படத்தில் நான் இருக்க வேண்டும் என்பதற்காக நடித்தேன். ‘சந்திரமுகி’ படத்தில் ஜோதிகா கேரக்டர் மெயின் என்றாலும், அதில் ரஜினிகாந்த் நடித்தார். அதையே இன்ஸ்பிரேஷனாக நினைத்து ‘விரூபாக்ஷா’ படத்தில் நடித்தேன். திரைக்குடும்பத்தின் வாரிசு என்பது ஒருவகையில் நல்லது.
இன்னொரு வகையில், நாம் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகிறது. நம்மால் நம் குடும்பத்துக்கு களங்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வருடத்துக்கு ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். காரணம், நான் பைக் விபத்தில் சிக்கி, தீவிர சிகிச்சைக்காக சில வருடங்களை ஒதுக்க வேண்டியிருந்தது. பிறகு கொரோனா லாக்டவுன் வந்தது. ஆனால், தற்போது பிசியாக நடித்து வருகிறேன். தமிழிலும் வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பேன். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.